Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, January 9, 2010

இங்கே நில உடமைதான் எல்லவற்றையும் தீர்மானிக்கிறது

தமிழக தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வட இந்திய தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. எல்லோரும் ஒன்று என்பவர்கள் உண்மையை அறியாதவர்கள் அல்லது அறிந்தே மறைப்பவர்கள். தமிழகத்தில் மூன்று தாழ்த்தப்பட்ட சாதிகள் பெரும்பான்மையாக அறியப்பட்டுள்ளன. பள்ளர் பறையர் மற்றும் சக்கிலியர். இவர்களில் சக்கிலியர் மேற்சொன்ன மற்ற இரு தாழ்த்தப்பட்ட சாதிமக்களாலேயே தாழ்த்தப்பட்டவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் கருதப்படுபவர்கள். படி நிலையில் அரசியல் சமூக தளங்களில் மிகவும் கீழான நிலையில் இருப்பவர்கள். இந்த மூன்று மக்களுமே ஒரே நிறையில் வராத போது வட நாட்டு தாழ்த்தப்பட்டவர்கள் எப்படி ஒரே தட்டில் வருவார்கள்? என்கிற போது தலித் என்ற சொல்லின் பொருத்தப்பாடு கேள்விக்குள்ளாகிறது.

இங்கே நில உடமைதான் எல்லவற்றையும் தீர்மானிக்கிறது. தமிழகத்தின் தென்பகுதி மாவட்டங்கள் மற்றும் எங்கள் பகுதியான திருச்சி கரூர் பகுதிகளில் எல்லாம் பள்ளர் இன மக்களிடம் நிலம் உள்ளது. வட பகுதி மாவட்டங்களான ஆற்காடு கடலூர் விழுப்புரம் பகுதிகளில் எல்லாம் பறையர் அல்லது ஆதிதிராவிடர் என குறிக்கப்படும் இன மக்களிடம் நிலம் உள்ளது. இதனாலேயே இவர்கள் இருவராலும் அரசியல் இயக்கங்களை முன்னெடுத்துச்செல்ல முடிகிறது. இந்தப்பகுதிகளில் உள்ள தம்மை ஆதிக்கசாதியினராக கருதிக்கொள்ளும் சாதியினரிடம் போராட்ட குணத்தோடு எதிர்த்து நிற்க முடிவதற்கு ஆதரவாக இருப்பது ஒரளவிலான அவ்ர்களின் பொருளாதார சுயசார்புதான். நிலமே இல்லாத கூலிகளாகவே அடிமைகளாகவே காலத்தை கழிக்கிற சக்கிலிய இன மக்கள் அரசியல் அனாதைகளாக உள்ளனர். அவர்களால் நிமிரவே முடிவதில்லை. இந்த நிலையில் இந்த மூன்று மக்களையும் இணைக்கிற விதமாக எந்த தாழ்தப்பட்டவர்களின் அரசியல் இயக்கமும் தம்து செயல் நோக்கை வைத்துக்கொள்வதில்லை. காரணம் அவர்களுக்குள்ள சாதிய பற்றுதான்.

இந்த நிலையில் எந்தச் சாதியானாலும் ஒடுக்கப்படுகிற எல்லா மக்களையும் இணைக்கிற ஒரு குடை உன்டென்றால் அது வர்க்கம் சார்ந்த போராட்டம் தான். தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான அரசியல் இயக்கங்கள் போராடி உரிமைகளைப்பெறுவதாக கருதினாலும் அது அவர்களின் ஒரு சாராருக்கே முன்னேற்றம் தரும். இட ஒதுக்கீட்டில் படித்து அதிலேயே வேலை வாங்கி நகர்ப்புறங்களில் வசதியான வாழ்வோடு தமது சாதிய அடையாளங்களை வசதியாக மறந்து விடுகிற ஒரு வர்க்கம் உருவாகி விட்டது. இந்த விபத்து தான் சாதிய ஒழிப்புப் போராட்டங்களின் முதல் சறுக்கல். சாதிய ஒழிப்பு என்பது ஒரு சாதியினருக்கு உரிமைகள் பெற்றுத்தருவதோ சமூகத்தில் அவர்களின் மதிப்பைக் கூட்டுவதோ அல்ல. சாதியை மறைப்பதாலேயோ ம்றுப்பதாலேயொ சாதி ஒழிந்து விடப்போவதில்லை. வர்க்கங்கள் ஒழிகின்ற போதுதான் சாதி ஒழியும். வர்க்கங்கள் ஒன்று என்றாகிற போது சாதியே அங்கே இருக்காது. மதமும் தேவை இல்லை. தோழர் லெனின் சோவியத்தை நிர்மாணித்த பின்னர் சர்ச்சுகளையா கொளுத்தினார்? எல்லம் சமம் என்கிற ஒரு பொன்னுலகை படைத்து முன்னால் காட்டும் போது அவர்கள் அதுகாறும் நம்பி வந்த கடவுள் சாதி மதம் என்ற அடையாளங்கள் தேவையற்றுப்போகும்.